புத்தளம் - சிலாபம் வலயத்துக்கு புதிய காதி நீதிபதி நியமனம்
(ஏ.என்.எம் முஸ்பிக் )
புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான காதி நீதிபதிக்கான வெற்றிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காணப்பட்டதோடு, புதிய காதி நீதிபதியை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையும் நடாத்தப்பட்டது.
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், குருநாகல் உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் மௌலவி அல்ஆலிம் கற்கையை நிறைவு செய்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்தோருக்கான காதி நீதிமன்றம் மற்றும் புத்தளம் காதி நீதிமன்றம் என்பனவற்றில் பல வருடங்களாக ஜூரி சபை உறுப்பினராக கடமையாற்றிய இவர், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆ மஸ்ஜிதின் பிரதம இமாமாகவும், நாகவில்லு புஹாரியா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
இவர் முஹம்மது காசிம் நஸீர் முஹம்மது ஷரீப் – காமிலா தம்பதிகளின் புதல்வராவார்.
புதிய காதி நீதிபதி நியமிக்கப்படும் வரை காதி நீதிமன்ற விவகாரங்களுக்காக புத்தளம் மக்கள் இதுவரை நீர் கொழும்பு பகுதிக்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments
Readers Comments